சினிமா பற்றி நீங்கள் எழுதிய இடுகையைப் படித்தேன். ஒட்டுமொத்தமாக சினிமா உலகத்தையே குறை கூறி தண்டிக்க வேண்டும்
என்று எழுதியிருந்தீர்கள். சினிமாத் துறையில் இருக்கும் அடிமட்டத் தொழிலாளியையும் அல்லவா உங்கள் தண்டனை பாதிக்கும்.
நீங்கள் உதாரணமாகக் காட்டிய கமல் அல்லது ஏனைய நட்சத்திரங்கள் எப்படியோ சின்ன விளம்பரப் படத்திலாவது முகத்தைக் காட்டி
பிழைத்துக் கொள்வார்கள் ஆனால் திரையில் தெரியாத கீழ் நிலை தொழிலாளியின் நிலை என்ன?
அடுத்து நீங்கள் சொல்லிய உதாரணத்தில் கமலையும் சேர்த்தது தப்பு.மற்றவர்கள் எல்லோரும் கடவுளை நம்பும் ஆத்திகர்கள்.
அவர்களுக்கு பகுத்தறிவே இல்லை.அதனால் அவர்கள் பல பேரோடு கூட்டுச் சேர்வது தப்பு.ஆனால் கமல் , கருணாநிதி போன்றவர்கள்
எவ்வளவு பெரிய பகுத்தறிவு வாதிகள் அவர்கள் எத்தனை பேரோடும் சேர்ந்து வாழலாம். அதுக்குப் பெயர்தான் லிவ்விங் டுகதர்.
அதுபற்றி நமது பதிவுலக பகுத்தறிவு வாதிகளே பக்கம் பக்கமாக எழுதினார்களே நீங்கள் படிக்கவில்லையா?
இந்த சுதந்திர நவீன உலகத்திலே லிவ்விங் டுகதர் தப்பு என்று சொன்னால் பதிவுலகமே உங்களை கேலி செய்யும்.
நீங்கள் சினிமாவை கேலி செய்யும் முன் நம் பதிவுலகிலே பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொண்டு லிவ்விங் டுகதருக்கு
ஆதரவாக பேசுபவர்கள் திருந்த வேண்டும் என்று ஒரு பதிவு போடுவீர்களா?
அடுத்து சினிமாவில் ஆபாசம் காட்டப் படுவதாக சொல்கிறீர்கள். சும்மா இலவசமாக எழுதும் பதிவைக் கூட பிரபலமாக்க
ஒரு ஏ ஜோக் , தடை செய்யப்பட்ட வீடியோ , பெண்களின் நிர்வாணப் படங்கள் தேவைப் படும் போது கோடிக் கணக்கில் செலவழித்து
படம் எடுப்பவர்கள் அவ்வாறு ஆபாசங்களை வெளியிடுவதில் என்ன தவறு?
பதிவுகளில் வெளியிடப்படும் ஆபாசத்தோடு ஒப்பிடும் போது படங்களில் வருவதெல்லாம் சர்வ சாதாரணம்.
இப்படி இருக்க நீங்கள் சினிமாவைக் குறை சொல்லும் முன் ஒருமுறை நம் பதிவர்களையும் குறை சொன்னால் நன்றாக இருக்கும்.
ஆனால் அவ்வாறு எழுதினால் நீங்கள் பல எதிரிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை கருதிக் கொண்டு எழுதுங்கள். ஏனெறால்
அவர்களும் ஏ ஜோக்குக்காகவே ஏங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜால்ரா போடும் கூட்டமே உள்ளது.